பாகிஸ்தான் டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ஜொனாதன் ட்ரோட் நியமனம்!

பாகிஸ்தான் டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ஜொனாதன் ட்ரோட் நியமனம்!

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்காக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக முன்னாள் வீரர் ஜொனாதன் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

39 வயதான ஜொனாதன் ட்ரோட், இதுவரை 52 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 81 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக முதற்தர போட்டிகளில் 18,662 ஓட்டங்களை குவித்துள்ளார்.

முன்னாள் அணித்தலைவர் போல் கோலிங்வுட் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டுக்கு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும், நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜூடன் பட்டேல் மற்றும் வார்விக்ஷயர் வேகப்பந்து வீச்சாளர் கிரேம் வெல்ச் ஆகியோரும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, ஒகஸ்ட் 5ஆம் திகதி மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.