
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரை ஒத்திவைத்தது அவுஸ்ரேலியா!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, கிரிக்கெட் அவுஸ்ரேலியா காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடரை, ஒத்திவைப்பது குறித்து இரு கிரிக்கெட் சபைகளுக்கிடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்த தொடர் ரி-10 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக நடைபெறவிருந்தது. ஆனால் தற்போது உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ரி-20 தொடரின் மூலம் அதிக லாபம் கிடைக்காது என நம்பப்படுகின்றது.
இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 4ஆம் திகதி டவுன்ஸ்வில்லே மைதானத்திலும், இரண்டாவது போட்டி 6ஆம் திகதி கெய்ர்ன்ஸ் மைதானத்திலும், மூன்றாவது போட்டி 9ஆம் திகதி கோல்ட் கோஸ்டிலும் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.