
குழந்தைகளுக்கான மரண பரிசோதனை குறித்து வெளியான தகவல்
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் உயிரிழப்பில் கட்டாய மரண பரிசோதனை உத்தரவை அரசாங்கம் தற்காலிக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணங்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்டிருந்த உத்தரவு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் அரசாங்கம் தற்போதைக்கு அதனை இடைநிறுத்தியுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணங்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு (Coroner) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ( Ministry of Justice & Integration) அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றுநிரூபம் ஒன்றின் மூலம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறித்த சுற்றறிக்கையில், இது இலங்கையில் குழந்தை மரண பகுப்பாய்வின் ஒரு அத்தியாவசிய அங்கம் என அமைச்சு வலியுறுத்தியிருந்தது.
இதுபற்றி அமைச்சின் மூத்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, இந்த நடைமுறை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களின் பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய மரணங்களைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
'இந்த மரணங்களுக்கு பின்னால் உள்ள காரணங்களைப் படிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பிரேத பரிசோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் இம்மரண வீதங்களைக் குறைக்க முடியும்.' என்பது அவர்களது கருத்தாக இருந்தது.
மற்றொரு தகவலின்படி சமீபத்தில் தாய் மரண விகிதத்தில் குறைவு அடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் சுகாதார குறியீடுகளை (Health index) மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் முயற்சியாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதுவரை ஒரு குழந்தையின் மரணம், சந்தேகத்திற்குரிய தீங்கு (Suspected Harm) சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் (Suspected Circumstances) அல்லது விபத்துகளை உள்ளடக்கியிருந்தால் மட்டுமே திடீர் மரண விசாரணை அதிகாரியினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனை (Postmortem) மேற்கொள்ள உத்தரவிடப்படும்.
எனினும் புதிய சுற்றுநிருபத்தின் பிரகாரம் மருத்துவர்கள் ஏற்கனவே மரணத்தின் (நோய்க்) காரணத்தை தீர்மானித்திருந்தாலும், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடற்கூற்று பரிசோதனை கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் இந்த கொள்கையை பல வைத்திய நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். சந்தேகத்திற்குரியதாக இல்லாத மரணங்களுக்கு எப்போதும் பிரேத பரிசோதனை தேவையில்லை என்பதைக் குறிப்பிட்டு, இது தேவையற்ற ஊடுருவல் என்று தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
ஒவ்வொரு பிரேத பரிசோதனைக்கும் அண்ணளவாக ரூ. 15,000 செலவாகும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இவ்வாறான Routine postmortem செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பது பணம், நேரம் மற்றும் வளங்கள் (Resources) வீண் விரயமாவதற்கு வழிவகுக்கும்.
'இத்தகைய கடுமையான நடவடிக்கைகளைக் முன்மொழிவதற்கு முன், இந்த செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுடன் (stakeholders) அவர்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.தொழில்நுட்ப உள்ளீடு (Technical input) இல்லாமல் சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகளை வழங்கக்கூடாது' என்றும் தங்கள் எதிர்ப்பை வௌிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான பல்வேறு தரப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம் தற்போதைக்கு குறித்த உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. அது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஊடக அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.