
ஒரே இடத்தில் இருவேறு மேதினக் கொண்டாட்டங்கள்! பேச்சுவார்த்தையில் பொலிஸார்
ஒரே இடத்தில் இருவேறு கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
கொழும்பில் ஹைட்பார்க் மைதானம் என்பது நீண்டகாலமாக அரசியல் செயற்பாடுகளின் பின்னிப் பிணைந்த இடமொன்றாகும்.பெரும்பாலான கட்சிகளின் முக்கிய தேர்தல் பிரச்சாரங்கள், மே தினக் கொண்டாட்டங்கள் அங்கு நடைபெறுவது வழக்கமாகும்.
இந்நிலையில் இந்த வருடத்துக்கான மேதினக் கொண்டாட்டங்களுக்காக கடந்த டிசம்பர் மாதமே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஹைட்பார்க் மைதானத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக பதிவு செய்திருந்தது.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, புதிய ஜனநாயக் கட்சி, இலங்கை மக்கள் கட்சி என்பன இணைந்து இந்த மேதினக் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முன்னிலை சோசலிசக் கட்சியின் வேண்டுகோளின் பிரகாரம் அவர்களுடைய மே தினக் கொண்டாட்டங்களுக்காக அதே ஹைட்பார்க் மைதானத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கான கொடுப்பனவை கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஒரே இடத்தில் இருவேறு கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது சாத்தியமற்ற நிலையில் இருதரப்பு முக்கியஸ்தர்களுடனும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எனினும் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கொழும்பு மாநகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரித்துள்ளது.