யாழில் துயர சம்பவம் - மூட்டைகளை ஏற்றும் போது கடலில் விழுந்த நபர் பலி
யாழ். (Jaffna) நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நெடுந்தீவு மாவலி துறைமுகத்தில் இன்று (10.12.2025) புதன்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், நெடுந்தீவு கிழக்கு, 15ம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிரேமகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் "நெடுந்தாரகை" பயணிகள் படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் விழுந்த நிலையில் வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நெடுந்தீவு கடற்படை சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டு குறித்த நபரை தேடி சடலமாகக் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கட்டானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.