யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் : விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த விவகாரம் தொடர்பில் சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை காவல்துறை உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதில் காணப்பட்ட தடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம்.
உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களிடமும், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
அத்துடன் உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்த அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.