இலங்கையில் சிம் பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிடில் சிம்கள் முடக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன எச்சரித்துள்ளார்.
இலங்கையில் முறையான அடையாள விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள அமைப்பில் 897,802 சிம் அட்டைகளுக்கு முறையான அடையாள உறுதிப்படுத்தல் இல்லை. 2019ஆம் ஆண்டு சிம் பதிவு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும், பதிவுத் தேவைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதையும் இந்தப் புதிய விதிமுறைகள் இலக்கு வைத்துள்ளன.
தற்போது 245,811 வணிக ரீதியிலான சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. பதிவு செய்யப்படாத சில சிம் அட்டைகள் பாரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளுக்குச் சரியான சந்தாதாரர் தரவுகள் அவசியம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லாதது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன.
முறையான பதிவு விபரங்கள் இல்லாத சிம் அட்டைகளைப் பயன்படுத்துவோர், தேவையான தகவல்களை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்தச் சிம் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.