காதலியை வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடிய காதலன் - தகராறு முற்றியதால் கொடூரம்
மொனராகலை மாவட்டம், வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நெடொலகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையே ஏற்பட்ட நீண்டநேரத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த காதலன் கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் விரைந்து சென்று படுகாயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெல்லவாய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.