ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு
இன்று (16) முதல் நாடு முழுவதும் 50 முதல் 60 சதவீதமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய தினத்திற்குள் (17) தனியார் பேருந்து சேவைகளை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (15) உத்தியோகபூர்வ வேலைநாளாக இருந்தபோதிலும், மக்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதால், அதிகளவான பேருந்துகள் பயணிகள் இன்றி இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று சுமார் 120 ரயில் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
இதற்கமைய, இன்று காலையும் மாலையும் அலுவலக ரயில்கள் வழமை போல் இயங்குவதுடன், வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் விசேட ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6:10 மணிக்கு மாத்தறை நோக்கி விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டதாகவும், இன்று பிற்பகல் 1:00 மணிக்கும் விசேட ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், எதிர்வரும் 19ஆம் திகதி பிற்பகல் மாத்தறையிலிருந்து பல விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.