சீரற்ற வானிலை: 3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 8,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல், லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், மற்ற 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விநாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்தும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 4 கதவுகள் தலா 2 அடி வீதமும், மற்ற 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த நீர்நிலைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலுள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.