திருகோணமலையில் வெப்பத்தை தணித்த மழை..! விவசாயிகள் மகிழ்ச்சி
மிக நீண்ட நாட்களாக நிலவிய கடும் உஷ்ணமான காலநிலைக்கு பிறகு, திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (10) மாலை மழை பெய்துள்ளது.
கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் மழை பெய்ததை அடுத்து நிம்மதி அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் விவசாயிகள் நெற் செய்கைக்கான விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த மழை பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன், வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடனும் மந்தாரமான சூழலுடனும் காணப்படுகிறது.
கடுமையான வெப்பநிலை காரணமாக வரட்சியடைந்து காணப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் நிலப்பரப்புகள் தற்போது மழையால் புத்துணர்ச்சி பெற்று வருகின்றன.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.