மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி

 ரொசேரியன் லெம்பட்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் ஊர்திப் பவனி, இன்று வெள்ளிக்கிழமை (15) காலை மன்னார் நகரை வந்தடைந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக இந்த ஊர்திப் பவனி ஆரம்பமானது. ஓமந்தை ஊடாக வவுனியாவைச் சென்றடைந்த இப்பயணம், நான்காவது நாளான இன்று மன்னார் மண்ணைச் சென்றடைந்தது.

மன்னார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை வீதி ஆகிய இரு முக்கிய இடங்களில் இந்த நினைவு ஊர்தி நிறுத்தப்பட்டது. இதன்போது, பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து மலர் தூவித் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

தொடர்ந்து, நகர வீதிகள் வழியாக ஊர்திப் பவனி சென்றபோது, பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் வரவேற்று உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.