கொழும்பில் இரகசிய அரசியல் சந்திப்பு: கீரியும் பாம்புமாக இருந்த தலைமைகள் ஒரே கூட்டணியில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே ஏற்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, தொலைபேசி அழைப்பொன்றின் வாயிலாக விமல் வீரவங்சவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பலப்படுத்தும் நடவடிக்கைகள்
அத்துடன் ஓய்வான நேரமொன்றில் தன்னைச் சந்திக்க வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதனையடுத்து கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு விமல் வீரவங்ச சென்றிருந்த நிலையில் இருவரும் நீண்ட நேரம் அரசியல் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது கூட்டு எதிர்க்கட்சியினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ரணில் விக்ரமசிங்க, அதில் விமல் வீரவங்சவும் முக்கிய பங்களிப்பொன்றை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
விமலும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த எதிர்க்கட்சிகளின் ஏனைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கூட்டு எதிர்க்கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதுவரைகாலமும் அரசியலில் கீரியும் பாம்புமாக இருந்த விமலும் ரணிலும் ஓரணியில் ஒன்றாகச் செயற்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.