கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்
மின்னல் தாக்கத்திற்கு உள்ளதான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
யு.எல். 606 (UL 606) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் ஒரு எஞ்சின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
இதனால் பாதுகாப்புப் படியாக விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், மாற்று விமானம் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட பயணிகள் குழுவினர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் காரணமாக விமானப் பயணம் 5 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் தாமதமாகியுள்ளது.
இச்சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் அல்லது விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.