24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"MV Ocean-Winner" எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், அதில் 1,700 தொன் இரும்புத் தாது கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் விபத்துக்குள்ளான போது அதில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 20 பேர் சீனக் குடிமக்கள், மூவர் மியான்மர் குடிமக்கள் மற்றும் ஒருவர் பங்களாதேஷ் குடிமகன் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) ஓகஸ்ட் 23 அன்று இரவு 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், தேடல் மற்றும் மீட்பு உதவிக்கான கோரிக்கையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

கப்பல் விபத்துக்குள்ளான செய்தி அறிந்தவுடனேயே, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

அதன்படி, தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மூன்று கடலோரக் காவல் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கப்பலின் பணியாளர்களில் எத்தனை பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

விபத்துக்குள்ளான கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள ஏனைய கப்பல்களுக்கும் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.