CNN உட்பட 3 முன்னணி ஊடகங்களுக்கு ட்ரம்ப் விதித்த தடை!
உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலம் குறித்து குறித்த ஊடக நிறுவனங்கள் பொய்களையும் புனைவுகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, ஜனாதிபதி தனது 'Truth Social' கணக்கில் பதிவொன்றை இட்டு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான எவ்வித குறிப்பிட்ட ஆதாரங்களையும் அவர் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அத்துடன், இந்தத் தடை உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்தோ அல்லது குறித்த ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைவது முற்றாகத் தடுக்கப்படுமா என்பது குறித்தோ இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நடவடிக்கை அமெரிக்க ஊடக அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதோடு, எதிர்காலத்தில் இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ட்ரம்பின் இத்தீர்மானத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள CNN அலைவரிசை, இது அமெரிக்க ஊடக சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட சட்டவிரோதத் தாக்குதலாகும் எனத் தெரிவித்துள்ளது.
தாம் எப்போதும் வெள்ளை மாளிகை ஊடகக் குழுவின் சார்பில் நிற்பதாகவும், அவர்களின் நியாயமான மற்றும் சரியான செய்தி அறிக்கையிடலை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் அந்த அலைவரிசை மேலும் குறிப்பிட்டுள்ளது.