
தபால் துறையானது வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்கப்படும்: இராஜாங்க அமைச்சர் உறுதி
தபால் துறையை வினைதிறன் கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என தபால் மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
தபால் சேவைகள் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை சகல துறை சார்ந்தும் ஒரு சுபீட்சத்தின் அடிப்படையில் இந்த நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்துகின்ற செயற்திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தபால்துறையை உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்காக இருகின்றது.
புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமானங்களை தபால் சேவை ஊடாக புகுத்தி. இதை மக்களுடைய காலடிக்கு கொண்டு வந்து செயற்படுத்துவதற்குரிய ஒரு துறையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவருடைய நோக்கமாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.