புதிய நீதியமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

புதிய நீதியமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து இன மக்களும் அச்சம் சந்தேகம் இன்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே எனது நோக்கம். அதற்கு தேவையான சட்டம் ஒழுங்கை ஏற்படுத்துவேன் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

நீதி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதி அமைச்சு என்பது மிகவும் பாரிய பொறுப்பு என்பதை நான் நன்கறிவேன். எங்களுக்கு பாரிய சவால்கள் இருக்கின்றன. அவற்றை வெற்றிகொள்ளவேண்டி இருக்கின்றன. அந்த சவால்களை வெற்றிகொள்ளவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் இந்த அமைச்சை எனக்கு வழங்கி இருக்கின்றார்.

நாட்டின் அரசியலமைப்புக்கோ மக்களுக்கோ எதிரான தவறு கடுகளவேனும் எம்மால் ஏற்படாது. அவ்வாறு எதுவும் ஏற்பட்டால் அது மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களே இடம்பெறும் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதி என்னை அழைத்து, நீ இந்த துறையை சேர்ந்தவன். இந்த துறையில் இருக்கும் குறைகள் உங்களுக்கு தெரியும். அதனால் தயவுசெய்து இந்த பொறுப்பை ஏற்று இந்த விடயங்களை செய்துதாருங்கள். அதற்கான பூரண ஒத்துழைப்பை நான் தருகின்றேன் என தெரிவித்தார். அதனால் இந்த அமைச்சை பொறுப்பெடுத்திருக்கும் எனக்கு இருக்கும் சவால்கள், சாதாரண கோரிக்கைகளை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சவால் அல்ல.