
மைத்திரியின் கையிலிருந்த முக்கிய அதிகாரம்! ஆனால் நடந்தது என்ன?
ஊழல் மோசடி காரர்களுக்கு தண்டணை வழங்கவே நல்லாட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்து. ஆனால் அது சரிவர நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“2015 ஆம் ஆண்டு ஊழல் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்கவே மக்கள் ஆணையை வழங்கினர், ஆனால் அப்போதைய ஜனாதிபதியின் கீழ் அந்த செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை. அதன் காரணமாகவே 2019 இலும் 2020 இலும் மக்கள் எம்மை தண்டித்தார்கள். அதுவே யாதார்தம்.
எமது அரசாங்கமே நாட்டை சரியான பாதையில் பயணிக்க வழி ஏற்படுத்தியது ஆனால் அதை சரிவர முடிக்க முடியாமல் போனது. விசேடமாக மக்கள் கேட்டதற்கமைய கள்ளர்களை சிறையில் அடைக்க முடியவில்லை. அது சட்டத்திற்கு உட்பட்டு செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை சட்டம் செய்யவில்லை. அதன் காரணமாகவே மக்கள் எம்மை தூற்றுகின்றனர்.
கள்ளர்களை பிடிப்பதில் எமது அரசாங்கம் தோல்வியடைந்தது. ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பியதில் எமது அரசாங்கம் வெற்றிக் கண்டது.
பாதுகாப்பு பக்கம் தோல்வியடைந்தமைக்கு எம்மால் பொறுப்பு சொல்ல முடியாது ஏனெனில் பாதுகாப்புக்குரிய சகல அதிகாரங்களையும் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவே தம்வசம் வைத்திருந்தார்” என்றார்.