அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் மகஜர் கையளிப்பு!

அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் மகஜர் கையளிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுனரிடம் மகஜர் கையளித்துள்ளனர். தமக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்களை குறித்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ள பட்டதாரிகள், தமக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இந்த மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர் சேபலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் பிரச்சனை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பிரச்சினை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சனை போன்ற மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவண செய்யுமாறு கோரி இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலையில் தமக்கும் 2 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் இந்த மகஜர் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.