சுங்க திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்ட கிடங்கு
சீதுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்புடைய கிடங்கு ஒன்றிற்கு சுங்க திணைக்களத்தினர் சீல் வைத்துள்ளனர்.
சுங்க மேற்பார்வையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பதற்காக இந்த கிடங்கு 2011 இல் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் மீள் ஏற்றுமதிக்காக வட்டவளை பகுதியில் உள்ள இன்னுமொரு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள விடயம் சுங்க திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்க அதிகாரிகள் குழு அங்கு சட்டவிரோதமான முறையில் மதுபானங்கள் வெளியே கொண்டு சென்றுள்ள விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த கிடங்கிற்கு சீல் வைக்கப்படுவதாக சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.