“எதற்கும் அஞ்சாதவள்! ட்ரம்புக்கே சவால் விடுவாள்” கமலா ஹாரிஸ் குறித்து தாய் மாமன்

“எதற்கும் அஞ்சாதவள்! ட்ரம்புக்கே சவால் விடுவாள்” கமலா ஹாரிஸ் குறித்து தாய் மாமன்

தாயார் சியாமளாவைப் போன்றே கமலாவும் தைரியமானவள், விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதில் சிறந்தவள். எதற்கும் அஞ்சாதவள் என கமலா ஹாரிஸின் தாய் மாமனரான 80 வயதுடைய கோபாலன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஆசிய, ஆபிரிக்க பின்னணிகளையும் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டிருக்கும் கலிபோர்னியாவின் செனட்டர் சட்டத்தரணி. ‘கமலாதேவி’ என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா ஹரிஸை நியமித்திருக்கின்றார்.

இலங்கையின் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியலில் பிரவேசித்து சொற்காலத்திலேயே செனட்டராக தெரிவு செய்யப்பட்டார் கமலா. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்களத்தில் அவரது பெயர் வர ஆரம்பித்தது. அப்போதே கமலா, அமெரிக்க அரசியலில் முக்கிய இடம் நோக்கி நகருவாள் என்றும் எண்ணியிருந்தேன்.

அத்தோடு அண்மைய காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கறுப்பின போராட்டங்கள் உள்ளிட்ட நெருக்கடியான நிலைமைகள் அதிகரித்திருக்கின்ற தருணத்தில் கமலா முக்கிய வகிபாகத்தினை கொள்வார் என்று நான் ஏற்கனவே எண்ணியிருந்தேன்” என்றார்.

கமலாவிடத்திலும் நீதிக்காக போராடுகின்ற, குரல் கொடுக்கின்ற மனநிலை இயல்பாகவே ஏற்பட்டிருக்கின்றது. பொதுப்பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் போக்கும் அதிகமாகவே உள்ளது. சட்டத்தரணியாக இருக்கும் கமலா, நிறுவன ரீதியாக செயற்படும் பாதையை தவிர்த்திருப்பது அவள் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் பிணைப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தவதாக இருக்கின்றது” என்று கமலாவும் தயைப்போல் சேய் என்பதை சுட்டிக்கூறிவிடுகின்றார் அவர்.

கமலாவைப் பொறுத்தவரையில் அவர் தனது தாயை போன்று மிகவும் தையிரிமானவள். எந்தவிடயங்களையும் ஆராய்ந்து பார்க்கும் திறமை கொண்டவள். தீர்மானங்களை சரியாக எடுக்கும் மனோ நிலையும் எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இருக்கும் போக்கும் அவளிடத்தில் காணப்படுகின்றது.

ஆகவே அரசியலில் பிரவேசிப்பது என்று முடிவெடுத்தபோது பல விடயங்களை நிச்சயமாக ஆராய்ந்திருப்பாள். ஏற்படப்போகும் சவால்களையெல்லாம் கவனத்தில் கொண்டிருப்பாள்.

ஆகவே அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களால் அவள் நிச்சயமாக தளவர்வடையப்போவதில்லை” என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

“இந்த நாட்களில் கமலாவைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றார். அவற்றுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கமலாவிடத்தில் இருக்கின்றது.

சியாமளா அடிக்கடி கூறுவதைப் போன்றே ‘என்ன செய்வதென்று தெரியும். எப்படிச் செய்வதென்றும் தெரியும்’கமலாவும் கூறுவாள். நியாயத்திற்காக போராடும் அவள் எதற்கும் அஞ்சாதவளாகவும் இருந்து வருகின்றாள்” என்றும் அவர் கூறினார்.

“ஜனநாயகப் பண்புகளை அதியுச்சமாக கொண்டிருக்கும் அமெரிக்காவில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசியர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் அமெரிக்காவின் வெவ்வேறு துறைசார்ந்த விடயங்களில் அதியுச்ச பதவிகளை வகித்துள்ளார்கள். வகித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அரசியலில் இவர்கள் பிரவேசிப்பதில்லை.

காரணம், தாம் வெளிநாட்டு பூர்வீகத்தினைக் கொண்டிருப்பதால் தமக்கான அங்கீகாரம் கிடைக்காது என்ற மனநிலையினாலாகும். ஆனால் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா நியமிக்கப்பட்டதன் மூலம் தெற்காசியர்கள் அந்த மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு முன்னுதாரணமாகி விட்டாள். அத்துடன் பெண்களுக்கும் பாரிய மனோ திடத்தினை வழங்கிவிட்டாள்.

கமலா வேட்பாளராக நிறுத்தப்பட்டதே பெருமகிழ்ச்சி அளிக்கையில் அவர் வெற்றி பெற்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியே” என்று தனது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினார் கோபாலன் பாலச்சந்திரன்.