யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளம் ஊடாக நிர்வாணமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவ்வாறு செய்யத் தவறுகின்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். இதேவேளை, புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.