அணிந்திருந்த ஆடை காரணமாக நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய அதாவுல்லா

அணிந்திருந்த ஆடை காரணமாக நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய அதாவுல்லா

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு, நாடாளுமன்றிற்குள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, சபை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எல் எம் அதாவுல்லா இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் உடையை ஒத்த ஓர் ஆடையை அணிந்தவாறு நாடாளுமன்றிற்குள் பிரவேசித்தார்.

இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்ததோடு, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

குறித்த உடையினை அணிந்து நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அவரை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றுமாறும் கோரினர்.

இதன் பின்னர் சபையிலிருந்து வெளியேறிய அதாவுல்லா, தாம் குறித்த ஆடை அணிந்தமைக்கான காரணத்தினையும் தெரிவித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது போன்ற உடையை அணிந்திருந்தார் எனவும், நினைவுகூர்ந்தார்.

அத்துடன் குளிர் காரணமாகவே தாம் அவ்வாறு ஆடை அணிந்ததாகவும் தெரிவித்தார்.