
நீர்கொழும்பில் வர்த்தகரின் வீட்டில் பணத்தை அள்ளிச்சென்ற நான்கு சந்கேநபர்கள் சிக்கினர்
நீர்கொழும்பு கட்டானை பொலிஸ் பிரிவில் 50 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள கோடீஸ்வர வியாபாரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 30 மில்லியன் பணத்தை கொள்ளையடித்தார் எனத் தெரிவித்து நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் இன்று பிற்பகல் தெரிவித்தனர்.
கடந்த 30 ஆம் திகதி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட காரின் உரிமையாளரும் , சந்தேக நபர்களை பஸ்சில் அழைத்து வந்த பஸ் சாரதியும் ,கொள்ளைச் சம்பவத்திற்காக கோடீஸ்வர வியாபாரியின் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து 18 பவுண் நகைகளும் 73 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கார் என்பவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக இந்த சம்பவத்தோடு தொடர்புடைய 4 சந்தேக நபர்களும் கொள்ளைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்களும் தற்போது தமது பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக கார், நவீன ரக பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.