இயக்கச்சியிலுள்ள ரீச்சா பண்ணை இயற்கையானவற்றையே தன்னகத்த்தில் கொண்டுள்ளது: இராஜாங்க அமைச்சர் புகழாரம்

இயக்கச்சியிலுள்ள ரீச்சா பண்ணை இயற்கையானவற்றையே தன்னகத்த்தில் கொண்டுள்ளது: இராஜாங்க அமைச்சர் புகழாரம்

யாழில் தென்னை பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பவர்களுக்கு அதற்கான உதவியை வழங்க தெங்கு அபிவிருத்தி சபை முன்வரும் என தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியிலுள்ள ரீச்சா பண்ணைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். அதேபோல தென்னை, பனை உற்பத்தியினை நாம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்த உற்பத்திகள் சுற்றுலாத்துறையின் போது அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய உற்பத்திகளாகும். நீங்கள் யாழில் தென்னை பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பார்களாயின் அதற்கான உதவியை வழங்க தெங்கு அபிவிருத்தி சபை முன்வரும்.

முழு ஆதரவினை வழங்குவோம். இந்த துறையை முன்னெடுக்க வடக்கில் இதற்கான சிறந்த வளங்கள் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்தவில்லை. அதேபோலவே பனை உற்பத்தி. அதுவும் கூட கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சு மட்டத்தில் நாம் அதனை முன்னெடுக்க முழு ஆதரவினை தருவோம். நாம் நம்புகிறோம் எதிர்வரும் காலங்களில் இப்பகுதி மக்கள் இந்த துறைகளை முன்னேற்றி அதன்மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது இங்கு அமைந்திருக்கும் ரீச்சா பண்ணை தொடர்பில இராஜாங்க அமைச்சர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், புகழாரம் சூட்டியிருக்கின்றார்.

இந்த நிலையில் இயக்கச்சியில் அமைந்துள்ள ரீச்சா பண்ணையானது முழுதும் இயற்கையானவற்றையே தன்னகத்தே கொண்டுள்ளதுடன், அது பெருமைப்பட வேண்டிய ஒன்றுமாகும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.