
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 76.56 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. அதேசமயம் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 83,13,877 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 514 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,23,611 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76,56,478 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 53,357 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,33,787 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.