கரவெட்டியில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா

கரவெட்டியில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா

வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

64 வயதுடைய பெண், 39 வயதுடைய பெண் மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உறவினர்கள் மூவருமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

அவர்களிடம் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் கொவிட் - 19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டபரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.