ஈழத்தமிழர்கள் குறித்து தமிழக முதல்வருடன் நேரடி சந்திப்பில் தமிழ் எம்.பிக்கள்

ஈழத்தமிழர்கள் குறித்து தமிழக முதல்வருடன் நேரடி சந்திப்பில் தமிழ் எம்.பிக்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (3) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழக முதலமைச்சரிடம் எழுத்துமூலமாக கோரிக்கை கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் 

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய – ஈழத் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரட்ணம் சுகாஷ், செல்வராசா கஜேந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், நடராஜர் காண்டீபன், கே. வி. தவராசா, தருமலிங்கம் சுரேஷ், ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.