
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட்..!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு மீண்டும் இமானுவேல் ஆர்னோல்டை நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது என்பது தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த தகவல்களில் குறிப்பிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுகள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கடந்த 26ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாநகர சபையின் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை ஏனைய கட்சிகள் தீர்மானிக்க முடியாது எனவும் இமானுவேல் ஆர்னோல்டை மீள களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமக்கு தரவேண்டும் என ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் நாளை மறுதினம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.