உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் நிறைவுபெற்றது..!

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் நிறைவுபெற்றது..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோர் மாதம் யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் பேரவையினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் முதல் தண்டணை வழங்கப்பட்ட மாணவர்கள் தம்மைத் தண்டணைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தினர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, மனிதாபிமான அடிப்படையில் நேற்று முன்தினம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்கிக் கொள்வதாக அறிவித்ததோடு, மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தியிருந்தார்.

எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து தாம் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று மாலை வரை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்குச் சென்ற துணைவேந்தர் அதனை கைவிடுமாறு மாணவர்களிடம் கேட்டு கொண்டதோடு உள்நுழைவுத் தடையை நீக்கும் அதிகாரம் தனக்குண்டு என்பதையும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வந்து தமது வழமையான செயற்பாடுகளின் மூலம், அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பீடத்தின் விரிவுரையாளர்களின் நல்லெண்ணத்தை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.