
மஹெல ஜயவர்தனவின் இன்று சாட்சியம் பெறப்படாது- விசேட விசாரணைப் பிரிவு
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜயவர்தன இன்று சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் எனவும் எதிர்வரும் நாட்களில் அவரை அழைப்பதாகவும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த விசாரணைப் பிரிவு தற்போது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதேநேரம், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் நேற்றைய தினம் 9 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் உப்புல் தரங்க மற்றும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோர் விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.