சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள்
நாட்டில் கொரோனா தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இந்நிலையில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தரம் 11, 12, 13 ஆம் வகுப்பு மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவிய பின்னர் அவர்களின் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது, மாணவர்கள் வருகைதந்த பின்னர் அவர்களிடையே சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பது எப்படி, யாருக்காவது திடீரென சுகயீனம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் அதிபர்களால் விளக்கமளிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.
அத்துடன் சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்பறையில் இட ஒதுக்கீடுகள் இடம்பெற்றிருந்தனர்.
எனினும் சிலமாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்திருந்த நிலையில் அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருந்தன.