இலங்கையில் நடத்துனர் இல்லாத பேருந்து! விரைவில் நடைமுறை

இலங்கையில் நடத்துனர் இல்லாத பேருந்து! விரைவில் நடைமுறை

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைமையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பயணிகளுக்கு, பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் 34 பயணிகளுக்கு போலி பயணச்சீட்டுகள் அண்மையில் வழங்கப்பட்ட மோசடி வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து பயணத்தின் ஆரம்பத்திலேயே பயணச்சீட்டு வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்துனர் இல்லாத பேருந்து! விரைவில் நடைமுறை | Sri Lanka Busses Will Run Without Conductor Soon

தவிரவும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான இ-டிக்கெட்டுகள் (e-tickets) என்ற இணையத்தளத்தின் வாயிலாக இலத்திரனியல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.