சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பம்

சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பம்

மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 06.03.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகும் கொள்கையின் கீழ் கொழும்பு ஹில்டன் ஹோட்டலை தனியார் துறை முதலீட்டிற்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஏற்கனவே நான்கு வர்த்தகர்கள் அதற்காக முன் வந்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் முதலீடு நிச்சயமாக அங்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் .மேலும் எமது அமைச்சின் கீழ் உள்ள ஹயாத் ஹோட்டலின் 50% பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான முதலீட்டாளரையும் தேடுகிறோம். டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் தாமரை கோபுரத்திலிருந்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான இரு பக்கங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள பேர வாவிகளை சுத்தப்படுத்தும் ஜப்பானிய அரசாங்கத்துடனான திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.