சூட்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள்: மடக்கிப்பிடித்த பொலிஸார்

சூட்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள்: மடக்கிப்பிடித்த பொலிஸார்

கற்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியில் சூட்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் ரூபா பெறுமதியான 961 கிலோ கிராம் பீடி இலைகளை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.வி.பி.ஜயம்பதி பண்டாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து மீன்பிடிப் படகு மூலம் பீடி இலைகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பீடி இலைகளை மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.