மலையகத்தில் கடும் பனியுடனான சீரற்ற காலநிலை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தில் கடும் பனியுடனான சீரற்ற காலநிலை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் பனியுடனான சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.

இதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களைச் செலுத்துவதுடன், வாகனங்களின் முகப்புவிளக்குகளை ஒளிரச்செய்யுமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் களுகள, பிட்டவல, கினிகத்தேனை ,கடவளை, தியகல, வட்டவளை, ஹற்றன் ஆகிய பிரதேசங்களிலும் ,ஹற்றன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளேயர், ரதெல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுகின்றது.

மேலும், வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை மற்றும் கடும் குளிர் காரணமாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், பல இடங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதால், மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.