
தமிழர் பகுதியில் கோர விபத்து ; இருவர் படுகாயம்
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய மினிவேனும், நகரை நோக்கி பயணித்த கொணட் ரக மோட்டார் சைக்கிளும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்திற்கு சற்று முன்னர் கடல்முக வீதியில் இருந்து திருஞானசம்பந்தர் வீதியை அடைந்த இன்னுமொரு மோட்டார் சைக்கிள் குறித்த மோட்டார் சைக்கிள் மோதிய பின்னர் மினி வேனுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினிவேனை செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.