
உலகை ஆட்டம் காண வைக்கும் ஈரான் ...! உச்சம் தொடும் எரிபொருள் விலை
மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha Athukorala) எச்சரித்துள்ளார்.
இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள். ஏவுகணை சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (16) ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $77.08 ஆகவும், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் $75.37 ஆகவும் விற்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, 12 ஆம் திகதி உலக சந்தையில் ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $68.04 ஆக பதிவாகியிருந்தது,
அதே நேரத்தில் ஒரு பீப்பாய் Brent மசகு எண்ணெய் $69.24 ஆக விற்கப்பட்டது. அதன்படி, கடந்த வாரத்தில் உலக சந்தையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.