
மகனை கிணற்றில் தள்ளி தந்தை தற்கொலை ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியா - திருவண்ணாமலை பாலாஜி ரெயில் நிலையம் அருகில் உள்ள கிணற்றில் தனது மகனை தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டியில் ரெயில் நிலையம் அருகே ஒரு கிணற்றில் இருந்து ஆண் ஒருவரும், 5 வயது சிறுவன் ஒருவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி பொலிசார் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்று கிணற்றில் கிடந்த இருவரின் உடல்களை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த பர்சை திறந்து பார்த்ததில் இறந்து போனவர்கள் திருப்பூர் மாவட்டம் நல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (37 வயது), அவரது மகன் கவின் (5 வயது) என்பது தெரியவந்தது.
திருப்பூரில் தையல் தொழிலாளியாக 15 ஆண்டுகள் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் அவரது மனைவி சந்தியாவிடம் பணம் வாங்கி வருகிறேன் என கூறி விட்டு அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை செல்வதற்காக ரெயிலில் மகன் கவினுடன் சென்றுள்ளார்.
அவர்கள் ரெயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய பாலாஜி ரெயில் நிலையம் அருகில் உள்ள கிணற்றில் தனது மகனை தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.