ஜப்பானைத் தாக்கிய சுனாமி
ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக 40 சென்ரிமீற்றர் (16 அங்குலம்) உயரமான சுனாமி அலைகள் உருவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சுனாமி அலைகள் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள உரகாவா நகரத்தையும் அமோரி மாகாணத்தில் உள்ள முட்சு ஒகவாரா துறைமுகத்தையும் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று (08) இரவு 11.15 மணியளவில் 7.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு 10 அடி உயரம் வரை சுனாமி அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு வானிலை ஆய்வு மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது.

அமோரி கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்கத்தின் அளவு ஜப்பானிய குடியிருப்பாளர்களை மின்சாரம் இல்லாமல் தவிக்க வைத்ததுடன் அமோரி மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பலர் காயமடைந்தனர்.
ஜப்பானிய பிரதமர் நிலநடுக்கத்திற்கு மூன்று கட்ட மீட்புப் பணிகளை அறிவித்ததுடன் அவசரகால பணிக்குழு ஒன்றையும் நிறுவினார்.
அத்துடன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் வெளியேறுமாறு ஜப்பானிய அரசாங்கம் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.