வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
புதிய வரி திருத்தங்களினால் வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மக்களுக்கு விளக்கமளித்துள்ளது.
நிதி அமைச்சின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சுங்க இறக்குமதி வரி (Customs Import Duty - CID) - தற்போதுள்ள 20 வீத வரி விகிதம் 30 வீதமாக உயர்த்தப்படவுள்ளதுடன் சுங்க வரி மேலதிக கட்டணம் (தற்போது நடைமுறையில் உள்ள 50 வீத மேலதிக கட்டணம்), மற்றொரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இரத்துச் செய்யப்பட உள்ளது.

இந்த வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.
எனினும், ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, தற்போதுள்ள வரிகளுடன் கூடுதலாக 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மட்டும் சேர்க்கப்படும்.
இதுவே வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் ஒரே மேலதிக செலவாகும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.