உணவு விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் முன்னுரிமை! அரசாங்கம் விசேட அறிவிப்பு

உணவு விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் முன்னுரிமை! அரசாங்கம் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், நாட்டில் உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொருள் தேவைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கான திட்டமிடல்களை முறைப்படுத்தும் நோக்கில் விசேட தரவு சேகரிப்புத் திட்டம் ஒன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.


உணவு விநியோகச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்குவதற்கும், எரிபொருள் விநியோகம் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும்போது துல்லியமான தரவுகளைப் பயன்படுத்துவதற்கும் இதன் மூலம் எதிர்பார்ப்பதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


வேறு எந்தவொரு அமைச்சிலோ அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ இதுவரை பதிவு செய்யப்படாத போக்குவரத்து அல்லது விநியோகச் சேவையாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தரவு சேகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


ஏற்கனவே அரச முறைமைகளில் பதிவு செய்துள்ளவர்கள் தமது தரவுகளை சமர்ப்பிக்க உரிய உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


முழுத் துறையிலும் நிலவும் எரிபொருள் தேவையைக் மதிப்பீடு செய்தல், போக்குவரத்து சேவையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிதல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை முன்வைத்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.


இந்தத் தரவுகள் தன்னார்வ அடிப்படையில் திரட்டப்படுவதோடு, முறையான பகுப்பாய்விற்குப் பின்னர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குப் பரிந்துரைகளாக முன்வைக்கப்படவுள்ளன.


தொடர்புடைய தரவுகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர் https://forms.gle/EPPu4bciG6onEptT9 என்ற இணைப்பின் ஊடாக கூகுள் படிவத்தை (Google Form) அணுகி விபரங்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.