பேருந்து கட்டண உயர்வு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

பேருந்து கட்டண உயர்வு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 

இதற்கமைய, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா குறிப்பிட்டார்.

 

எவ்வாறாயினும், பேருந்து கட்டண திருத்தம் நேற்று (22) முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என பல பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

 

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சென்ற போதிலும் தமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

நேற்றைய தினம் கட்டண திருத்தம் இடம்பெறாத காரணத்தினால், இன்றைய தினம் பேருந்து சேவைகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

 

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் வரை சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.

 

எப்படியிருப்பினும், இன்றைய தினம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன், 10 சதவீதத்திற்கும் அதிகமான கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.