இந்தியா முழுவதும் பேசுபொருளான ஈழத் தமிழர் பிரச்சினைகள்! ஒற்றைக்காரணமாக மாறிய விஜய்
தமிழக ஊடகங்களில் பேசப்பட்ட முள்ளிவாய்க்கால், இனவழிப்பு உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் பிரச்சினைகள் தற்போது இந்திய அளவில் செய்திகளாகவும், விவாதமாகவும் மாறி இந்தியா முழுவதும் மீண்டும் கவனம்பெற்றுள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் குறித்து வெளியிட்ட ஒற்றைப் பதிவு, இந்திய ஊடகப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சண் மாஸ்டர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவு தினம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்ட பதிவு, இந்திய தேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான ஊடகங்களில் முள்ளிவாய்க்கால் மற்றும் ஈழத் தமிழர்கள் என்ற அடையாளம் இன்று பேசு பொருளாக மாறியுள்ளது என்று அரசியல் அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒற்றைக் காரணம்
தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழகத்தை கடந்து இந்திய அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி ஊடகங்களில் கொண்டு கொண்டு செல்லப்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் முள்ளிவாய்க்கால் குறித்து வெளியிட்ட ஒற்றைப் பதிவு மீண்டும் இந்தியா முழுவதும் தேசியத் தலைவர் பெயரையும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பு இடத்தையும் செய்திப் பக்கங்களையும் கடந்து தொலைக்காட்சி விவாதங்களாகவும் இந்தியா முழுவதும் ஊடகப் பரப்பையும் சூடாக்கி உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களின் நீதிக்காக என்றோ ஒரு நாள் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு வரலாற்றில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 543 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவை நாம் பெற வேண்டும் அதற்கு முதலில் தமிழகத்தை கடந்து இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் ஈழத் தமிழர்களின் அவலங்கள் பேசப்பட வேண்டும் என்பதோடு அவை கருத்துருவாக்கமும் பெறவேண்டும்.
அந்தவகையில் ஈழம், முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை போன்ற எமது வலிகள் நிறைந்த வார்த்தைகளை தற்போது தமிழக ஊடகபரப்பை கடந்து இந்திய ஊடகங்கள் இன்று உச்சரித்தமைக்கு ஒற்றைக் காரணம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் என்பதை நுண்ணறிவு கொண்ட மக்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.” என்றார்.