59 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்... ராஜேஸ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது. இதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் அந்த அமைச்சரவையில் இடம்பெறுவர் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரைத் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இருவரும் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
சுமார் 59 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இணைவதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வகுத்துள்ள மக்கள் நலன் சார்ந்த மற்றும் மக்கள் சார்பான நல்லாட்சிக் கொள்கைகளைச் செயல்படுத்த பாடுபடுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.