நீட் போராட்டத்தில் முழங்கிய சனம் ஷெட்டி.. தியேட்டருக்கு வெளியே செம குத்தாட்டம்

நீட் போராட்டத்தில் முழங்கிய சனம் ஷெட்டி.. தியேட்டருக்கு வெளியே செம குத்தாட்டம்

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பிறகு அது மாணவர்கள் போராட்டமாக மாறி தமிழ்நாட்டிலும் நடைபெற்றுவருகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் போராட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டி கலந்துகொண்டு பேசிய விஷயங்கள் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தன.

மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பதில் ஒன்றிய பாஜக அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி பல மாநிலங்களில் பல மாணவர்கள், மாணவிகள் உயிரை விட்டாலும், தங்கள் கனவை சிதைத்தாலும் நீட்டை நீக்க முடியாது என திட்டவட்டமாக உள்ளது ஒன்றிய அரசு. இது ஒருபக்கம் இருக்க நீட் தேர்வு வினாத்தாள் அண்மையில் கசிந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக டெலிகிராம் செயலியை எல்லாம் தடை செய்தது.

Sanam Shetty Trolled After Jana Nayagan Celebration Video Goes Viral

வெடித்த போராட்டம்: சூழல் இப்படி இருக்க வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் சேர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தை வழக்கம்போல் ஒன்றிய அரசு அலட்சியத்தாலும், அதிகாரத்தாலும் ஒடுக்க பார்த்தது. ஆனால் போராட்டக்காரர்களின் மன உறுதிக்கு நிகராக எதுவும் இல்லாததால்; தர்மேந்திரர் பதவி விலகிவிட்டார்.

தமிழ்நாட்டில் போராட்டம்: இதற்கிடையே டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் தமிழ்நாட்டிலும் பரவியது. இங்கே மாணவர்கள், மாணவிகள் மெரினாவில் போராட நினைத்திருந்தார்கள். ஆனால் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு கடற்கரையை மூடிவிட்டது. அதனைத் தொடர்ந்து பாலன் இல்லத்தில் கூடி போராடினார்கள். அமீர், வெற்றிமாறன், பா.இரஞ்சித் என பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்தார்கள்.

சனம் ஷெட்டி என்ட்ரி: இப்போராட்டத்தில் எந்த அரசியல் சாயமும் பூசப்படக்கூடாது என பலரும் தெளிவாக இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகை சனம் ஷெட்டி பாலன் இல்லத்துக்கு சென்று தனது ஆதரவை அளித்தார். அளித்ததோடு மட்டுமின்றி, 'இங்கே ஒரு அஜெண்டாவோடு போராடுகிறார்கள். நான் தளபதி விஜய்யின் ரசிகை. நேற்றுகூட ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்' என பெருமை பொங்க கூறினார். உடனே அங்கிருந்த மாணாக்கர்கள், வெளியேறுங்கள் நீங்கள் பேசவே வேண்டாம் என்று அனுப்பி வைத்தார்கள்.