யாழில். இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்

யாழில். இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்

யாழ்ப்பாணத்தில் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை  கடைகளை திறந்து  வியாபார நடவடிக்கைகளை முன்னெடடுக்கலாம். வீண் குழப்பங்கள் தேவையில்லை’ என யாழ்.வணிகர் சங்கத்தின் உப தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  ‘கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாணத்தில் செயற்படும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அத்தியட்சகர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சபையின் சங்கத் தலைவர்கள் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. நாட்டினை மீள இயல்பு நிலைக்கு  கொண்டுசெல்லும் முயற்சியாக யாழ்ப்பாணம் உட்பட முக்கியமான நகரங்களில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவ்வாறான வர்த்தக நடவடிக்கைக்கு ஏதுவாக  போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கவனமெடுப்பதாகவும் வடக்கு ஆளுநரால்   தெரிவிக்கப்பட்டது.

‘இது தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லை. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று தாக்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வியாபார செயற்பாடும் முடக்கப்பட்டிருந்தது. எனினும் தற்பொழுது கட்டங்கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு சகல செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

‘இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்பும் முகமாகவும் நாட்டை மீள வழமைக்கு கொண்டுவருவதற்காகவும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

‘இது தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் குழப்பமடையத் தேவையில்லை. உங்களால் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

‘இதற்கு ஏதுவாக இரவு 10 மணி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல், பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் கூடிய அக்கறை செலுத்தப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் வர்த்தகர்கள் குழப்பமடையத் தேவையில்லை’  என்றார்.