யாழில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் -கணவன் மனைவி உட்பட மூவர் கைது

யாழில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் -கணவன் மனைவி உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன் களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம், சாவகச்சேரி, சுண்ணாகம் பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவரே யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 பவுண் திருடப்பட்ட நகைகள், திருடப்பட்ட 20 பவுண் நகைகளுக்கான அடைவு சீட்டுக்கள்,அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கணவன்-மனைவி மற்றும் அவர்களோடு திருட்டில் ஈடுபட்ட ஒருவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

அண்மைய நாட்களில் வீடுகளில் தனித்திருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து குறித்த குழுவானது இரவு வேளைகளில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி வயோதிபர்களை கடுமையாக தாக்கி நகை, பண கொள்ளையில் ஈடுபட்டிருந்தது

யாழ் மாவட்டத்தின் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு திருட்டுச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றிலும் முற்படுத்தவுள்ளனர்.