சந்நிதி செல்லும் பக்தர்களுக்கு விசேட பயணவழி

சந்நிதி செல்லும் பக்தர்களுக்கு விசேட பயணவழி

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று மாலை 06 மணிக்கு பால நுழைவாயிலில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைப்பகுதியில் உள்ள நீரியல் வளத்திணைக்களத்திற்குச் சொந்தமான பாலத்தின் ஊடாக போக்குவரத்திற்காக நீரியல் வளத்தினைக்களத்தின் பொறியியலாளர்களின் ஒத்துழைப்போடு திறக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தினுடான போக்குவரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை வருடாவருடம் வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.

இம்முறை கொரோனா முன்னெச்சரிக்கை வழிவகைகளுடன் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவிற்கு இணங்க மட்டுப்படுத்தப்பட்டளவிலான பக்தர்களின் எண்ணிக்கை, நேர வரையறைகள், சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

எமது சபை ஊடாக வாகன தரிப்பிட வசதிகள், ஒளியூட்டல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்வேவைகள் மாலை 7 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஆலயத்தினை அடையும் பக்தர்கள் வீடியோ கமராக்கள் மூலம் சுகாதாரத்தினை மையப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றது.

மக்கள் பாலத்தினுடாக பயணிக்கையில் தம்மை அடையாளப்படுத்தி உரிய பதிவுகளுக்கு உட்படுத்தியே ஆலயத்தினை அடைய வேண்டும்.

பாலப்பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களின் வழிநடத்துதலையும் அறிவிப்புக்களையும் முழுமையாகப் பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.